பாகுபலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும் – குடை பிடித்தபடி பிரதமர் பேட்டி!

Prime Minister Modi holding an umbrella in the Parliament premises as he was ready for a constructive discussion.

ஆக்கபூர்வமான விவாதத்திற்கு தயாராக உள்ளோம் என நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி குடை பிடித்தபடி செய்தியாளர்களிடம் பேட்டி.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் 19 அலுவல் நாட்களில் மொத்தம் கிட்டத்தட்ட 30 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விவாதம் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு பாகுபலி போல வலுவானவர்களாக அனைவரும் உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு கூறும் விளக்கத்தையும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடினமான கேள்விகளை கேட்கட்டும், ஆனால் அமைதியான முறையில் விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். டெல்லியில் மழை பெய்து வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி குடை பிடித்தபடி செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டு உள்ளது. இதனால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.