முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்களுக்கு டிச.10-ல் இறுதிச்சடங்கு.
ராணுவ ஹெலிஹாப்டர் குன்னூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி முழுமையாக எரிந்துள்ளது.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்க்டனுக்கு சென்ற போது, காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய விமான படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் நாளை ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.
இதனை தொடர்ந்து, டிசம்பர் 10-ஆம் தேதி காலை 11 முதல் 2 மணி வரை பிபின் ராவத் வீட்டில் இருவரின் உடல்களும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். மக்கள் அஞ்சலிக்கு பின் டெல்லி காண்டோன்மென்ட்டில் உள்ள மயானத்தில் இருவரின் உடல்களும் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.