முதல்வர் பழனிசாமி நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இலவசங்கள் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களால் கடன் சுமை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் போது கடன் சுமை 4 லட்சத்து, 85 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கிறது என்றும் இது, 5 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாயாக வரும் ஆண்டில் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதல்வர் பழனிச்சாமி அரசு பதவிக் காலம் முடியும் போது வைத்துவிட்டுப் போகும் கடன் ரூ 4 லட்சம் 85 ஆயிரம் கோடி என்றும் 2020-21ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ.65,994 கோடி பற்றாக்குறை என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த லட்சணத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர் கடன் தள்ளுபடி என்று முதல்வர் நாளுக்கு ஒரு தள்ளுபடி அறிவிப்பை வெளியிடுகிறார். இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை என கூறி, “எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது என விமர்சித்துள்ளார்.
இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!
“எனக்குப் பிறகு பிறளயம் வரட்டுமே” என்று பிரான்ஸ் நாட்டு் மன்னன் சொன்னது நினைவுக்கு வருகிறது
— P. Chidambaram (@PChidambaram_IN) March 29, 2021


