பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரைத் துடைத்தெறிந்தவர் எஸ்.பி.பி. என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பெருமதிப்பிற்குரிய ஐயா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். தனது பாடல்கள் மூலம் மக்களின் மனத்துயரைத் துடைத்தெறிந்தவர் இன்றைக்கு நம்மை மீளாத்துயருக்குள் ஆழ்த்திச் சென்றிருக்கிறார்.
ஐயாவை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆறுதலை தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். அவரது மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! மண்ணைவிட்டு மறைந்தாலும் காற்றில் கரைந்திடா அவரது கானங்கள் மூலம் காலங்கள் கடந்தும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார் என்று பதிவிட்டுள்ளார்.
unknown node