கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.
எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பார்த்து, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதிமுக கட்சியின் ஒரு பிரிவிற்கு தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் கட்சிகளை பார்த்து, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டதாகவும், இந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும் என்றும் ஊடகங்களிடம் புலம்பியுள்ளார்.
மக்கள் விரோத, மதவெறி பாஜகவிடம் நிரந்தர அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, கட்சியின் சின்னத்தைக் காப்பாற்றவும், கட்சியை நடத்தவும் பாஜகவின் தயவு தேடி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றவரை குறைகூறுவது கேலிக்கூத்தானது.
ஈரோடு இடைத் தேர்தலில் தனது சொந்தக் கட்சி வேட்பாளரை அறிவிப்பதற்கு கூட பாஜக தலைவரின் அனுமதிக்காக காத்திருந்த எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமையை ‘கொத்தடிமை’ என்று சொந்தக் கட்சியினரே அங்கலாய்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக்கு பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது உட்பட ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோத நடவடிக்கைகள் எதையும் எதிர்க்க திராணியில்லாமல் அடங்கி கிடந்தது பழனிச்சாமியின் ஆட்சி. தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க் கட்சியான பிறகும் கூட இந்தப் போக்கில் மாற்றமில்லை.
தமிழ் நாட்டின் அனைத்து தரப்பினரின் கண்டனத்தையும் தாண்டி, ஆளுநரின் அடாவடி அரசியலுக்கு ஆதரவளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போதும் கூட, நாட்டையே உலுக்கிக் கொண்டுள்ள மோடியின் உற்ற நண்பரானஅதானியின் ஊழல் – முறைகேடு பற்றியும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோடி ஆட்சியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் கொடூர தாக்குதல் குறித்த பிபிசிஆவணப்படம் பற்றியும் எடப்பாடி வாய் திறக்கவில்லை.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவினை அதிமுகதான் தாங்கிப் பிடித்து வருகிறது என்று வெட்கமேயில்லாமல் பேசியிருக்கிறார். மதவெறிக் கூட்டத்திற்கு விசுவாச அடிமைகளாக தொடர்வதன் மூலம் சொந்த கட்சிக்கே எடப்பாடி பழனிச்சாமி முடிவுரை எழுதுகிறார் என்பது திண்ணம்.’ என தெரிவித்துள்ளார்.
unknown node