நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார் – முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

Stalin says what I do - Chief Minister Palanisamy's speech

விவசாயிகளின் துன்பங்களை அறிந்ததால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் ரத்து :

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.  முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து :

முதலமைச்சர் அறிவிப்புக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி. விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக ரத்து செய்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.திமுக எதைச் சொல்கிறதோ, இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார் என்று பேசினார்.

முதலமைச்சர் பதில் கருத்து :

இந்நிலையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தனது இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கினார்.சென்னை போரூர் பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நான் சொல்வதைத்தான் முதலமைச்சர் செய்கிறார் என்று ஸ்டாலின் கூறிவருகிறார், ஆனால் நான் செய்வதைத்தான் அவர் சொல்கிறார்.கடைசி வரை திமுக சொல்லிக்கொண்டே இருக்கப்போகிறது.செய்யும் இடத்தில் அதிமுக இருக்கப்போகிறது. விவசாயிகள் படும் சிரமம் தெரியும் என்பதால் பயிர்க்கடனை தள்ளுபடி செய்தேன் என்று  முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.