கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிற்பூங்கா என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனடியாக திரும்பப் பெற கோரி திமுக அரசை வலியுறுத்தி ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதைத் தடுத்திடவும்; புஞ்சை நிலங்களையும், தரிசு நிலங்களையும், தகுந்த விளைச்சல் நிலங்களாக மாற்றிட புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 2,300 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை எடுத்தது.
தற்போது, மற்றுமொரு பேரிடியாக கோவையில் தொழிற்பூங்கா அமைப்பதற்காக 3,900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. எனவே, பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை மனதில் நிலைநிறுத்தி, சாமானியரை அலட்சியம் செய்யாமல், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்து, உலகின் தலையான தொழிலான உழவுத் தொழில் மேலோங்கும் வகையில், உழவர்கள் உயர்வடையும் வகையில், கோயம்புத்தூரில் இரண்டு தொழிற்பேட்டை பூங்காங்க்கள் அமைக்கும் முடிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்
unknown node