மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

The Chief Minister said that steps should be taken to visit the beneficiaries of this scheme even if they do not have proper identity card.

Tamilnadu CM MK Stalin

உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும், இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உரை.

மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அவர் கூறுகையில்,தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய திட்டம் உருவாக்கப்பட்டது இல்லை; மகளிருக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டப்பூர்வமாக்கியவர் கருணாநிதி; மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு; பெண்களுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பழங்குடியினர் இதர ஆதரவற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும்.  விளிம்பு நிலை மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவற்றை பெற வழி செய்து, உரிமை தொகை கிடைத்திட உதவ வேண்டும். அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும். 1 கோடி விண்ணப்பங்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும், இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.