யூடியூபர் மாரிதாஸ் டிசம்பர் 23 வரை சிறையில் அடைப்பு – நீதிமன்றம் உத்தரவு!

YouTuber Maridhas jailed till December 23 - Court orders!

முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முப்படைத்தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.அவர்களுக்கு டெல்லியில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில்,முப்படைத் தளபதி மரணம் தொடர்பாக விமானப்படை மற்றும் மத்திய அரசின் கருத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதனையடுத்து,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து,யூடியூபர் மாரிதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை கைது செய்ய சென்றபோது அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் போலீசார் அவர்களை அப்புறப்படுத்திவிட்டு கைது செய்தனர்.மேலும்,அவர் மீது 153 ஏ, 504, 505 (2), 505 (1)பி சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையில்,தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த மாரிதாஸ் தனது பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் “மதுரையில் மாரிதாஸ் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை. ஒருபக்கம் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ஏவல் படையை தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைது செய்கிறது! இந்த கபட நாடகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து,யூடியூபர் மாரிதாஸை உத்தமபாளையம் கிளை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.