ரோஹித் ஆட்டத்தை இடைநிறுத்திய ஒடிசா மைதானம்! கரண்ட் இல்லையா? காரணம் என்ன?

இந்தியா - இங்கிலாந்து 2வது ஒருநாள் ஆட்டத்தில் ஒடிசா கட்டாக் மைதானத்தில் 30 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது குறித்து விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

IndVEng 2nd ODI - Cuttack stadium Odisha

கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டி மட்டும் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) ஒடிசா மாநிலம் கட்டாக் கிரிக்கெட் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து, இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்த போட்டியில் தான் கேப்டன் ரோஹித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தனது பழைய ஹிட்மேன் ஃபார்முக்கு திரும்பி 90 பந்தில் 119 ரன்கள் அடித்தார்.

2வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க வீரர்கள் விளையாடி கொண்டிருக்கும் போது 6வது ஓவர் முடிந்த சமயம், ரோஹித் 29 ரன்களிலும், சுப்மன் கில் 17 ரன்களும் எடுத்திருந்தனர். அப்போது திடீரென மைதானத்தில் விளக்குகள் எரியாமல், போதிய வெளிச்சம் இல்லாமல் போனது.  சுமார் 30 நிமிடங்கள் இந்த பிரச்சனை இருந்தது. இதனால் ஆட்டம் தடைபட்டது. வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தும் ஒடிசா கிரிக்கெட் மைதானத்தில் இவ்வாறு விளக்குகள் எரியாமல் போன சம்பவம் இணையத்தில் பெருபொருளாக மாறியது. பலநூறு கோடி ரூபாய் கணக்கில் வருமானம் ஈட்டும் பிசிசிஐ இவ்வாறு மைதானத்தை சரிவர கவனிக்கவில்லையா? முறையாக கரண்ட் பில் கட்டவில்லையா எனவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மைதானத்தை சரிவர கவனிக்காமல் இருந்தது குறித்தும், மின்விளக்குகள் கோளாறு ஏற்பட்டது குறித்தும் விளக்கம் கேட்டு ஒடிசா கிரிக்கெட் மையத்திற்கு (OCA) ஒடிசா மாநில விளையாட்டு துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல் அடிப்பைடயில், இந்த இடையூறுக்கான காரணத்திற்கான விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்கவும், இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான நபர்கள்/நிறுவனங்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோடிட்டுக் காட்டவும் ஒடிசா கிரிக்கெட் சங்கத்திற்கு (OCA) இதன்மூலம் உத்தரவிடப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கடிதம் கிடைத்த 10 நாட்களுக்குள் இந்த தடை ஏன் ஏற்பட்டது என விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போட்டியை 30 நிமிடங்கள் நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் OCA செயலாளர் சஞ்சய் பெஹெராவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்