ஐபிஎல் தொடரில் இன்றைய CSK vs KKR போட்டியில், முதலில் பேட் செய்த சென்னை அணி 144/6 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணி அளவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், கான்வே நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். ருதுராஜ் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய ரஹானே 16 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களமிறங்கிய ராயுடு, மொயின் அலி ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த கான்வே விக்கெட்டை இழந்து வெளியேறினார். சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் சிவம் துபே பொறுப்பாக விளையாடி அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார்.
முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சிவம் துபே 48* ரன்களும், கான்வே 30 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும் குவித்துள்ளனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
