டெல்லி :T20 உலகக் கோப்பை 2026-இல் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நெருங்கி வரும் நிலையில், முன்னாள் இலங்கை வீரர் சமாரா கபுகெடெரா இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு பெரும் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் இந்திய அணியின் T20 வெற்றிகள் பெரும்பாலும் அபிஷேக் சர்மாவை சார்ந்தே இருந்ததாக அவர் கருத்து தெரிவித்தார்.
அபிஷேக் சர்மாவின் ஆக்ரோஷமான பேட்டிங் ஸ்டைலை, முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிரிஸ் கெய்லின் ஆரம்பகால ஆட்டத்துடன் ஒப்பிட்டு பேசிய கபுகெடெரா, “கடந்த ஆண்டு அபிஷேக் எப்படி ஆடியிருக்கிறார் என்பது அபாரமானது. கிரிஸ் கெய்ல் தவிர வேறு யாரும் இப்படி செய்ததை நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.
தற்போதைய இந்திய அணியில் அபிஷேக்கை யாராலும் மாற்ற முடியாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.சஞ்சு சாம்சன் சிறந்த வீரர் என்றாலும், அபிஷேக் சர்மாவின் அதிவேக ஆட்டம் இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் பெரும் சுதந்திரத்தை அளிப்பதாக கபுகெடெரா சுட்டிக்காட்டினார். இதனால் அணி விரும்பியபடி ஆட்டத்தை வடிவமைக்க முடியும் என்றும், இந்த T20 உலகக் கோப்பை பயணத்தில் – குறிப்பாக இறுதிப் போட்டிக்கு செல்ல – அபிஷேக் மிக முக்கியமானவர் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கனவே அங்கு இரண்டு போட்டிகளை விளையாடியுள்ளதால் சிலர் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதினாலும், கபுகெடெரா அதை மறுத்தார்.
பிரேமதாசா மைதானம் பொதுவாக குறைந்த பவுன்ஸ், மெதுவான தன்மை கொண்டது, பந்து பிடிக்கும் தன்மை அதிகரிக்கும் என்றும், இதனால் பாகிஸ்தானுக்கு சிறப்பு நன்மை இல்லை என்றும் விளக்கினார்.இருப்பினும், இந்தியா லேசான பேவரிட் என்றாலும், பாகிஸ்தானின் தற்போதைய ஆட்டத்தை பார்க்கும்போது மிக நெருக்கமான போட்டியாக இருக்கும் என்று கபுகெடெரா எதிர்பார்க்கிறார். அபிஷேக் சர்மாவின் பங்களிப்பு இந்த முக்கிய போட்டியில் இந்தியாவுக்கு பெரும் வலிமையாக அமையும் என்பது அவரது கருத்து.
