ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: "விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும்"- பிசிசிஐ..!

ICC World Test Championship final 2021: "Virat Kohli-led Indian team should focus on their health" - BCCI ..!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க உள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்,விராட் கோலி தலைமையிலான இந்திய அணி,ஜூன் 18 அன்று சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜூன் 2 ஆம் தேதி இங்கிலாந்துக்கு செல்கிறது.இதனைத்தொடர்ந்து,இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ),தனது இந்திய அணி வீரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.இதனால்,இங்கிலாந்துக்குச் செல்லும் வீரர்கள் மும்பை செல்லும் வரை தனிமையில் இருக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

மேலும்,இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னர் மும்பையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும்.அந்த பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என வரும் இந்திய அணி வீரர் விமானத்தில் ஏற்றப்படமாட்டார்.எனவே, வீரர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்,கொரோனா இரண்டாவது அலைகளை மனதில் கொண்டு,எந்தவொரு தொற்றுநோயும் இல்லாமல் வீரர்கள் வருகின்றனர் என்பதை உறுதி செய்வதற்காக,இந்திய அணி வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும்,

இதனைத்தொடர்ந்து,இந்திய அணி வீரர்களுக்கு இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி இங்கிலாந்தில் போடப்படும் என்றும் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.