#IREvIND:அயர்லாந்தை அலறவிட்ட இந்தியா – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து (IRE vs IND) அணிகள் மோதும் முதல் T20 போட்டி ஞாயிற்றுக்கிழமை(நேற்று) டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார்.இந்திய அணியை ஹர்திக் வழிநடத்துவது இதுவே முதல் முறை.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து,களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக,ஹாரி டெக்டர் அதிக ரன்கள் எடுத்தார்.அவர் 33 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மழைக்காக 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 12 ஓவர்களில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் வெற்றிக்கு 109 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,இந்திய அணியின் தொடக்க ஜோடியாக களமிறங்கிய தீபக் ஹூடா,இஷான் கிஷான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர்.ஆனால்,அதன்பின்னர்,கிரேக் யங்கின் பந்து வீச்சில் இஷான் விக்கெட்டை பறிகொடுத்தார்.அவரைத் தொடர்ந்து, களமிறங்கிய சூர்யாகுமார் யாதவ் வந்த வேகத்தில் முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து,அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கி அதிரடி காட்டிய நிலையில்,24 ரன்களில் அவரும் எல்பிடபுள்யூ ஆகி விக்கெட்டை இழந்தார்.இதனையடுத்து,தினேஷ் கார்த்திக் மற்றும் தீபக் ஹூடா இருவரின் பார்ட்னர்ஷிப் உடன் இந்திய அணி இலக்கை எட்டியது. இறுதியில்,இந்திய அணி 9.2 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக,தீபக் ஹூடா 6 பவுண்டரி 2 சிக்சர் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.சாஹல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து,அடுத்த போட்டி நாளை நடைபெறவுள்ளது.

unknown node