விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!
மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா? என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா, பண்ட் கேட்ட முதல் கேள்வியைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
இது குறித்து பேசிய அவர் “மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா?’ என்பதுதான்,” என மருத்துவர் தின்ஷா பர்திவாலா தெரிவித்தார். ரிஷப் பண்ட், தனது மெர்சிடிஸ் காரில் பயணித்தபோது, ரூர்கி அருகே நடந்த விபத்தில் கார் தடுப்பில் மோதி தீப்பிடித்தது. இதில் அவருக்கு முகம், கால், முதுகு மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
மருத்துவர் மேலும் ரிஷப் பண்ட் குறித்து பேசுகையில், “அவரது மன உறுதி ஆச்சரியமளிக்கிறது. கடுமையான காயங்களுக்கு மத்தியிலும், கிரிக்கெட்டை மீண்டும் விளையாடுவது பற்றியே அவர் சிந்தித்தார்,” என டாக்டர் பர்திவாலா கூறினார். இதன் மூலம் எந்த அளவுக்கு ரிஷப் பண்ட் கிரிக்கெட் மீது ஆர்வத்தை கொண்டு இருக்கிறார் என்பது தெரிகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ரிஷப் பண்ட், விபத்துக்குப் பின் தீவிர புனர்வாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டு, 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்கினார். அவரது மறுவரவு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2025-யில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் கூட சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 2 சதங்கள் விளாசி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.