மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!
மணிப்பூரில் மர்ம கும்பல் ஒன்று நான்கு பேரை சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர். பிற்பகல் 2 மணியளவில் மோங்ஜாங் கிராமத்திற்கு அருகே இந்த தாக்குதல் நடந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் பதுங்கியிருந்து இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மிக அருகில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறிப்பாக, சம்பவ இடத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட வெற்று குண்டுகள் மீட்கப்பட்டன.
இதனிடையே, துப்பாக்கிச்சூட்டிற்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், உயிழந்த சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரும் கூடுதல் பாதுகாப்புப் படையினரும் வன்முறை ஏற்பட்ட அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரின் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பல தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். தடைசெய்யப்பட்ட மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) போராளி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாம்டெங் அவாங் லெய்காயில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.