முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 371 ரன்கள் என்ற இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப் பிடித்து வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி.

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது.
மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் இங்கிலாந்து அணி, இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை வகித்த போதிலும் இந்திய அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. இந்தியா அணி, இங்கிலாந்துக்கு 371 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளுக்கு 373 ரன்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்பாடே இந்தியாவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். இந்தியா அணிக்காக, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றியை தவறவிட்ட இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மோசமான பந்துவீச்சு தான் என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டை எடுத்த சிராஜ், 2-வது இன்னிங்சில் விக்கெட் எடுக்கவில்லை. அதேபோல், நட்சத்திர பவுலரான பும்ரா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டை எடுத்த நிலையில், 2-வது இன்னிங்சில் தலைகீழாக நின்று தண்ணி குடித்தபோதும், அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை.
குறிப்பாக போட்டியில் கேட்ச் மேல் கேட்சுகளை (4) தவற விட்ட ஜெய்ஸ்வால் மற்ற வீரர்கள் எரிச்சலடைய வைத்துள்ளார். முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினாலும் அவரின் பீல்டிங் மிக மோசமாக இருந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட், ஓலி போப், ஹாரி புரூக் என 3 பேரின் கேட்ச்களை கோட்டைவிட்டார் ஜெய்ஸ்வால், அதன் தொடர்ச்சியாக 2-வது இன்னிங்சிலும் பென் டக்கெட்டின் கேட்சை தவறவிட்டார்.
பாடம் கற்போம் – கில்
போட்டி முடிந்த பின் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த இந்தியா அணியின் கேப்டன் கில், ”இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தபோதும், அதை தவறவிட்டதாக’ கூறியுள்ளார். மேலும், இது போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் வாய்ப்புகள் எளிதில் வராது. ஆனால் நாங்கள் நிறைய கேட்சுகளை தவறவிட்டோம். கீழ் வரிசை பேட்டிங் வீரர்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை எனக் கூறிய அவர், நாங்கள் ஒரு இளம் அணி. வரும் போட்டிகளில் இந்த தவறுகளை சரிசெய்வோம்” எனத் தெரிவித்தார்.