ஐபிஎல் குவாலிபையர்: இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதல்.! மழை பெய்தால் என்னவாகும்?
சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் குவாலிபையர் 1 போட்டியில் பஞ்சாப், பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதுகின்றது. இதில், வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும்.

சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ‘குவாலிஃபயர் 1’ சுற்றில், பஞ்சாப் மற்றும் பெங்களூரு மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றது.
இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வாய்ப்பைப் பெறும். அதாவது, நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் பெங்களூரு அணி மோத வேண்டியிருக்கும். குவாலிஃபையர் 1 மற்றும் குவாலிஃபையர் 2-ல் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும், அதே நேரத்தில் எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2-ல் தோல்வியடையும் அணிகள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படும்.
நேற்றைய தினம் லக்னோவுக்கு எதிரான போட்டியில், ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்தலக்னோ, 20 ஓவர்களில் 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பண்ட் 118 ரன்களை விளாசினார். அடுத்து களமிறங்கிய பெங்களூரு, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.
கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 85 (33) ரன்களை விளாசி ருத்ரதாண்டவம் ஆட, 18.4 ஓவர்களில் 230 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம், புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது. ஒரு ஐபிஎல் சீசனில் வெளியூர்களில் நடந்த அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை பெங்களூரு படைத்துள்ளது. நடப்பு சீசனில்பெங்களூரின் பெரும் கனவான ‘ஈ சாலா கப் நமதே’ இந்த சீசனிலாவது நிறைவேறுமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
மழை பெய்தால் என்னவாகும்?
ஒருவேளை போட்டியின் போது, மழை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் குவாலிஃபையர் 1 போட்டியை முடிக்க முடியாவிட்டால், ஐபிஎல் விதிகளின்படி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இரண்டாவது இடத்தில் உள்ள அணி, எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும்.