ஓட்டுநரே இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி.! அட்டகாசமான சேவையை அறிமுகப்படுத்திய உபேர்.!

லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

லாஸ் வேகாஸில் ரோபோ டாக்ஸி சேவையை உபேர்(Uber) நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

பிரபல பன்னாட்டு டாக்ஸி நிறுவனமான உபேர்(Uber), அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துகிறது. ஹூண்டாய் மற்றும் அப்டிவ் நிறுவனங்கள் மோஷனல் உடன் இணைந்து இந்த கூட்டு முயற்சியில்  இறங்கியுள்ளது.

நிறுவனங்களின் கூறிய தகவலின்படி, அவர்கள் தற்போது வாகனத்தை இயக்குவதற்காக ஆபரேட்டர்களைக் கொண்டுள்ளனர், என்றும் 2023 ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு முழுமையான ஓட்டுநர் இல்லா தானியங்கு ரோபோ டாக்ஸி அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

ரோபோ டாக்ஸி சேவைக்கு ஹூண்டாய்-ன் லோனிக் 5 எஸ்.யு.வி கார்களை பயன்படுத்தியுள்ளது, என்றும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் அமெரிக்க மார்க்கெட்டுக்கு ஏற்ற குறைந்த செலவு போன்றவற்றில் முழு திருப்தி அளிப்பதாகவும் கூறியிருக்கிறது. மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கைக்காக 30 சென்சார்கள், கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டுநர் இல்லாமல் கார், தானாக இயங்கும் வகையில், குறிப்பிட்ட விதிமுறைகளுடன், அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்குவதற்கு லோனிக் 5 எஸ்.யு.வி கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த லோனிக் 5 எஸ்.யு.வி கார்கள், ஒரே சார்ஜில் 315 மைல்கள் தூரம் ஓடுவதற்கும், 18 நிமிடத்தில் 80% சார்ஜ் ஆகும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

மோஷனல் தானியங்கு கார் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, சாலை நிலவரங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆபரேட்டர்களுடன் தற்போது இயங்கி வருவதாகவும் அடுத்த ஆண்டு 2023இல் முழுமையாக தானாக இயங்கும் ரோபோ டாக்ஸி சேவை உபேர்(Uber) மூலம் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.