ஹைதராபாத்: போதை பொருள் விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுத்துள்ள தெலுங்கு நடிகை சார்மி, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். 12 பேருக்கு சம்மன் தெலுங்கு திரையுலகில், போதை பொருள் சப்ளை கொடி கட்டி பறக்கிறது. சமீபத்தில் போதை பொருள் சப்ளையின் முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகையர், 12 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இதுவரை, ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இன்று (ஜூலை, 24) நடிகர் நவ்தீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நடிகை சார்மி, கடந்த 21ம் தேதியே சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகி இருக்க வேண்டும். அதை தவற விட்டதால், வரும் 26ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு தாக்கல் இந்த சூழ்நிலையில், ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடிகை சார்மி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘ போதை பொருள் விவகாரம் தொடர்பாக சந்தேக நபர்களின் ரத்த மாதிரி, முடி, நகம் ஆகியவற்றின் மாதிரிகளை வலுகட்டாயமாக கேட்டு பெறுவது அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவுக்கு எதிரானது. மேலும் நான் விசாரணைக்கு ஆஜராகும் போது என்னுடன் ஒரு வழக்கறிஞர் இருக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், விசாரணைக்கு நடிகை சார்மி ஆஜராகும் போது, விசாரணை நடக்கும் அப்காரி பவன் கட்டடத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பை சிறப்பு புலனாய்வு குழு கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.