மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார். உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமலேயே தமிழகம் எடுத்து வரப்பட உள்ளது. கிருஷ்ணசாமி உடலை எடுத்து வரும் ஆம்புலன்சுக்கு தமிழக எல்லை வரை கேரள போலீசாரும், பின்னர் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியதாவது:
ஒக்கி புயல் முதல் நீட் தேர்வு என்று தமிழர்கள் அல்லல் படும்பொழுதெல்லாம் உதவிக்கரம் நீட்டிய அண்டை மாநில முதல்வர் திரு.பிணராயி விஜயனிடம் பேசி தமிழர்களின் நன்றியைத் தெரிவித்தேன். மாணவரின் தந்தை உடல் திருத்துறைப்பூண்டி வந்தடையும் வரை உதவிகள் செய்யும் மக்கள் நீதி மய்யம்.