10 இல்ல... இன்று 11 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

tamilnadu city in rain

சென்னை :நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையத்தின்படி, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (28ம் தேதி) தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வருகின்ற நாளை (01-03-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை

இன்று முதல் 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.

சென்னை நிலவரம்

இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.