சென்னையில் 13-ஆம் தேதி வரை மழை இருக்கு! பிரதீப் ஜான் கொடுத்த வானிலை அப்டேட்!
ஜீன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னையில் தொடர்ச்சியாக 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் வரும் நாட்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து வானிலை தொடர்பான செய்திகளை கொடுத்து வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன் 11-ஆம் தேதி 11-06-2025: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து அடுத்ததாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஜீன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” வங்கக்கடலில் வருகின்ற ஜூன் 11 -ஆம் தேதி அல்லது 12ம் தேதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதன் காரணமாக அந்த தேதிகளில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது .
அதே சமயம், ஜூன் 11 க்கு பிறகு வருகின்ற 12ம் தேதியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும். சென்னையில் ஏற்கனவே பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே, வரும் 13ம் தேதி வரை சென்னையில் மழை தொடரும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.