”நெஞ்சில் குத்துகிறார்கள்.., நானே பாமக தலைவர்” – ராமதாஸ் திட்டவட்டம்.!
குலசாமி என சொல்லிவிட்டு நெஞ்சில் குத்துகிறார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் : தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”பாமகவை முன்னேற்ற, வலுப்படுத்த அன்புமணி தயாராக இல்லை. உழைப்பதற்கு தயாராக இல்லாத அன்புமணி, கட்சியை வைத்து பணம் சம்பாதிப்பதேயே நோக்கமாக கொண்டிருக்கிறார்.
என்னை குலசாமி என்று சொல்லிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார். என்னை நடைப்பிணமாக்கி விட்டு கட்சியை வளர்க்க நடைபயணம் செல்ல இருப்பதாக நாடகமாடுகிறார் அன்புமணி. தைலாபுரம் தோட்டத்தில் எனக்கு தெரியாமலே பாஜகவினருக்கு விருந்து வைத்திருக்கிறார் அன்புமணி.
எனது இல்லத்திலேயே ‘ஜெய் ஹிந்த்’ கோஷம் கேட்கிறது, அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை. யார் சொன்னாலும் அன்புமணி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டார். 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அவரிடம் இருந்ததாகவும் விமர்சித்துள்ளார்.
தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று நினைப்பவர் அன்புமணி என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக கருத்து பதிவிடுவதாகவும் அன்புமணியை, அவர் சாடியுள்ளார். மேலும், பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தற்போது இல்லை என ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியை அன்புமணி சரியாக வழிநடத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், 2024 மக்களவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிடக் கூடாது எனத் தான் எதிர்த்ததாகவும், தன்னை வற்புறுத்தி கையொப்பம் வாங்கியதாகவும் கூறியுள்ளார். இந்தத் (2026) தேர்தலில் தானே அனைத்து முடிவுகளையும் எடுப்பேன் , நானே பாமக தலைவராக நீடிப்பேன் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.