“தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது” நீயா, நானா என்பதை பார்த்துவிடுவோம் – ராமதாஸ்.!

ஐயா என்று சொல்லிக்கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார் அன்புமணி.. என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

anbumani - ramadoss

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் நீடித்து வரும் நிலையில், தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று சொல்லியும் அதனை அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது, எழுதிக் கொடுக்க சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோபம் பொங்கி எழுந்தது.

என்னை மானபங்கம் செய்வது போல் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளன. நான் உருவாக்கிய கட்சியில் ஓராண்டு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா எனக் கேட்க அவமானமாக உள்ளது. குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. கண்ணீர் விட்டு வளர்த்த கட்சி (பாமக) இப்படி இருப்பது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கட்சியில் அனைத்தும் தனக்கே வேண்டும் என அன்புமணி நினைப்பதாகவும் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணிக்கு முடி சூட்டு விழா நடந்தது. அப்போது நான் ஆனந்த கண்ணீர் விட்டேன், தந்தைக்கு பிறகே தனயன்… எனக்கு பிறகே அன்புமணி என எல்லாரும் சொல்கிறார்கள். குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம்… தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது என்பது உலக நியதி, குலசாமி என்று சொல்லிவிட்டு நெஞ்சு குலையில் குத்துகிறார்கள்.

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு முன்னர் தலைவர் பதவியை அன்புமணிக்கு விட்டுத்தர தயாராக இருந்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். அதன் பின்னர், கட்சியில் நடந்த மாற்றங்கள் தன்னை கோபத்திற்கு ஆளாக்கியதால் நீயா, நானா என்ற முடிவுக்கு வந்ததாக ராமதாஸ் கூறியுள்ளார். 40 ஆண்டுகளாக கட்சியைக் காத்த தான் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் தலைவராக இருக்கக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ம.க நிறுவனரான நான் வீட்டின் கேட்டை சாத்தி விட்டு இருக்க முடியாது. என்னை குல தெய்வம் என்று சொல்கிறார்கள்,
எனது தொண்டர்களை நான் வழிகாட்டியாக பார்க்கிறேன். மாவட்ட செயலாளர் கூட்டம் நடந்த அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் காத்திருந்திருக்கும்” என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்