’34 பஞ்சாயத்துகள்.., பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது’ – பாமக நிறுவனர் ராமதாஸ்.!
பாமகவில் நடைபெற்று வரும் மோதலை தடுக்க நடைபெற்ற பேச்சுவார்த்தை டிராவில் முடிந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சித் தலைமை மற்றும் நிர்வாகம் தொடர்பாக மோதல் நீடித்து வந்த நிலையில், மரச பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதாக பாமக நிர்வாகிகள் தகவல் தெரிவித்திருந்னர்.
ஆனால், தற்போதைய நிலைமையை பார்த்தால் அவ்வாறு தெரியவில்லை. தலைவர் பதவியை விட்டு கொடுக்க தயார் என கூறியும், அன்புமணி எழுதித் தர சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டை ராமதாஸ் முன்வைத்துள்ளார். தைலாபுரத்தில் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ”எனக்கும் செயல் தலைவருக்குமான பிரச்னைகள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, பாமக பிரச்னையில் சிறந்த ஆளுமைகள் 2 பேரின் சமரச பேச்சுவார்த்தை நடக்கிறது.
எனக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனைகள் பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது. எனக்கும் அன்புமணிக்கும் இடையே 34 பஞ்சாயத்துகள் நடைபெற்றன.இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நான் இங்கே இருந்து கொண்டு கட்சியை வளர்ப்பது, அன்புமணி வெளியே சென்று கட்சியினரை பார்ப்பது என தீர்ப்பு சொன்னார்கள்.
தலைவர் பதவியை தான் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும் அன்புமணி நம்பவில்லை. அதன் பின்பு என்னோடு இருந்த கோபம் வெளிப்பட்டது, நீயா? நானா? என பார்த்துவிடுவோம் என முடிவு செய்துவிட்டேன்” என்று பரபரப்பாக பேசியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், 6 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா? என உருக்கமான கேள்வி எழுப்பிய ராமதாஸ், ”ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார்” என்றார்.