எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெட்டிக் கதை பேசுகிறார்! முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
இன்னொரு கட்சி தலைவர் அறிக்கையை காப்பி அடித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேசிக்கொண்டிருக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதில் பேசிய அவர் ” அமைதிப்படை அமாவாசை பெயருக்கு பொருத்தமானவர் என்றால் செந்தில் பாலாஜி தான். இந்த பெயரை அவரே தேடிக்கொண்டார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும்போது திமுக ஆட்சி காலத்தில் ஆட்சி காலம் கலைந்து கொண்டு இருக்கிறது” என பேசியிருந்தார். இதற்கு ஏற்கனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றையும் வெளியீட்டு இருந்தார். அவரை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ” எடப்பாடி இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார்” என பேசியுள்ளார்.
இன்று சிவகங்கையில் பல்வறு முடிவுற்ற திட்டங்களை துவங்கி வைத்தும், புதிய திட்டங்களையும் முதலமைச்சர் துவங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் ” திமுக மக்களுக்காக செய்யும் பல நல்ல விஷயங்களை தாங்கி கொள்ளமுடியாமல் எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கிறார். கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்துகொண்டு திண்ணையில் உட்கார்ந்து வாய்க்கு வந்தபடி பேசலாமா? பாவம்… இன்னொரு கட்சி தலைவர் அறிக்கையை காப்பி அடித்து அதே அப்படியே பேஸ்ட் செய்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பேசிக்கொண்டிருக்கிறார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக சார்பாக 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அந்த 505 வாக்குறுதிகளில், 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
இந்த நேரத்தில் நான் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கேட்கிறேன். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நாள், அதற்கான அரசாணை, அதனால் பயனடைந்தோர் உள்ளிட்ட புள்ளி விவரத்தை எடப்பாடி பழனிசாமி வெளியிடத் தயாரா?
எதிர்கட்சித் தலைவர் பழனிச்சாமி அரசு வெட்டிச்செலவு செய்கிறது என்கிறார் . எது வெட்டிச்செலவு? மகளிர் உரிமைத்தொகையா? காலை உணவுத் திட்டமா? எதை கொச்சைப்படுத்தி இப்படி பேசுகிறார்? நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்புக் கணக்கு தான்.திமுக ஆட்சிக்கு 13 அமாவாசை தான் இருப்பதாக காலண்டரை அவர் கிழிக்கிறார்” எனவும் விமர்சித்து பேசினார்.