“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!
பாஜக எப்போதும் மக்கள் பிரச்சினை பற்றி பேசாது கடவுளை வைத்து மக்களிடையே பிரச்சினையை உருவாக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின் மொழிக் கொள்கையை விமர்சித்து, “ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வி, ஹிந்தி திணிப்புக்கு எதிரான அவரது நிலைப்பாட்டையும், ஆங்கிலத்தின் உலகளாவிய முக்கியத்துவத்தையும், தாய்மொழிகளின் அவசியத்தையும் வெளிப்படுத்தியது. மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்த சீமான் ” மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு, தமிழர் கடவுளான முருகனை தமிழில் வழிபடவும், திருப்புகழை தமிழில் பாடவும், பழனிச்சாமியை மனதார வணங்கி அவருக்கு பின்னால் அணி திரளவும் வலியுறுத்துமா? ஆங்கிலத்தை தவிர்த்து, ஹிந்தி மட்டும் பயில்வது உலக நாடுகளுடன் தொடர்பு கொள்ள உதவுமா? ஒரே மொழியை மட்டும் திணிப்பது, பல மொழிகளை அழித்து, நாட்டின் ஒற்றுமைக்கும் தேசத்தின் பன்முகத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தாதா?
ஆங்கிலம் உலகளவில் தொடர்பு மொழியாக உள்ள நிலையில், தாய்மொழியில் அறிவு மற்றும் தெளிவு இருந்தால் எந்த மொழியையும் கற்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். “இந்தியாவை இந்து நாடுகளுடன் மட்டும் தொடர்பு கொள்ளும் நாடாக மத்திய அரசு அறிவிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், மொழி விவகாரத்தில் கட்டாயத்தை எதிர்த்தார்.
மேலும் தொடர்ந்து அவர் பேசுகையில் ” திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்க முயன்றவர்களுக்கு அது பலனளிக்கவில்லை. இப்போது தமிழர்களின் இறையான முருகனை தொட முயல்கிறார்கள். எனது தேசிய விடுதலைப் போராட்டத்தில் மொழி, இனம், கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றை மீட்பது முதன்மையானது. இத்தனை ஆண்டுகளாக பாஜகவும் இந்து அமைப்புகளும் முருகனை தொடாமல் இருந்துவிட்டு, இப்போது ஏன் தொடுகிறார்கள்? திருப்பரங்குன்றம் மலையில் எழுந்த சிக்கலை ஏன் இப்போது கையில் எடுக்கிறார்கள்?
பிற நாடுகளில் இந்து கோயில்கள் கட்டி வழிபட அந்த நாட்டு அரசுகள் அனுமதிக்கின்றன. ஆனால், இங்கு ஏன் அத்தகைய அனுமதி மறுக்கப்படுகிறது? ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே செயல்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகள் கடந்த பிறகும், இதுவரை முருகனை வழிபடாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் அவரை தொட முயல்கிறார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.
அதே சமயம், விநாயகரை தான் பாஜக தமிழ்நாட்டில் பெரிதளவில் எடுத்து செல்ல நினைத்து ஆனால் அது எடுபடவில்லை என்பதால் இப்போது தமிழ் கடவுள் முருகனை கையில் எடுத்துள்ளது. பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது. கடவுள்களை தான் பிரச்சினையாக மாற்றும் ” எனவும் சீமான் தெரிவித்தார்.