கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. காரணம் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கமல் கூறியது சர்ச்சையானது.
அவரது கருத்து கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் கருத்தை கண்டித்து பல கன்னட சங்கங்கள், அவரது படத்தை மாநிலத்தில் வெளியிடக்கூடாது என்றும், படம் அம்மாநிலத்தில் வெளியிடப்படுவதைத் தடுக்க நீதிமன்றத்தையும் அணுகினர். இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டிலும் நடந்து வருகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு இன்று வந்தபோது, கர்நாடகா அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் படத்தை வெளியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. படம் வெளியிடப்பட்டால், மாநில அரசு முழு பாதுகாப்பையும் வழங்கும். படத்தை எதிர்க்கும் அமைப்பும் வன்முறையில் ஈடுபடாது என்று தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் உஜ்வால் பூயான் மற்றும் நீதிபதி மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அனைத்து தரப்பினரின் வாக்குமூலங்களையும் பதிவு செய்து இந்த வழக்கை தீர்த்து வைத்தது. மேலும், மாநில அரசின் அணுகுமுறை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், “ஒரு நகைச்சுவை நடிகர் ஏதாவதுகூறினால் கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன, நாம் எங்கே எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்?
நாளை இதே போன்று ஒரு நாடகத்துக்கு எதிராகவோ, கவிதைக்கு எதிராகவோ கும்பல்கள் மிரட்டல் விடுக்கக்கூடும். இதனை அனுமதிக்க முடியாது. ‘தக் லைப்’ திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
வன்முறைகள் ஏற்பட்டால் அரசு அடக்க வேண்டும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.