அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

பாமக நிறுவனர் ராமதாஸை அவமதிப்பது, பாட்டாளி மக்கள் சமுதாயத்தையே அவமதிப்பதற்கு ஒப்பாகும் என அருள் தெரிவித்துள்ளார்.

pmk arul

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  இதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக, சமீபத்தில் கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்திருந்தார்.

மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், 2025 ஜூன் 29 அன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பாமகவில் நிலவும் உட்கட்சி மோதல் குறித்து கருத்து தெரிவித்தார். “அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள் ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள் உள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸை அவமதிப்பது, பாட்டாளி மக்கள் சமுதாயத்தையே அவமதிப்பதற்கு ஒப்பாகும்,” என அவர் கூறினார்.

மேலும், அன்புமணி ராமதாஸின் சமீபத்திய பேச்சு, இலந்தைப் பழம் விற்பவர்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளதாகவும், இது பாமகவின் அடித்தளமான வன்னியர் சமூகத்தைப் புண்படுத்துவதாகவும் அருள் கண்டனம் தெரிவித்தார்.

அருள் மேலும் கூறுகையில், “ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என்று அன்புமணி கூறுவது ஏற்புடையதல்ல. அவர் கட்சியை உருவாக்கிய தலைவர். அவரது முடிவே இறுதியானது. அன்புமணியை தலைவராக நியமித்தது ராமதாஸ் என்றால், அவரை அவமதிப்பது எப்படி சரியாகும்?” எனக் கேள்வி எழுப்பினார். பாமகவில் தற்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அருளின் இந்தக் கருத்து கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ் ஆதரவாளராக அறியப்படும் அருள், சேலம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, “நான் உயிருடன் இருக்கிறேன், இறந்தவர்களுக்கு மட்டுமே கூட்டு பிரார்த்தனை செய்வார்கள்,” என அன்புமணியின் கூட்டு பிரார்த்தனை கருத்துக்கு பதிலடி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்