உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!
வேட்டுவம் படப்பிடிப்பின்போது உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜுவின் குடும்பத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ரூ.20 லட்சம் நிதியுதவு வழங்கியுள்ளார்.

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் (ராஜ்கமல், வினோத், பிரபாகரன்) மீது கீழையூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த சண்டைக்கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்கள். இந்த சூழலில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் இருவரும் மோகன்ராஜ் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கியுள்ளனர். அதன்படி நடிகர் சிம்பு ரூ.1 லட்சம் கொடுத்து மோகன்ராஜ் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளார். இந்த தகவலை பிரபல ஸ்டண்ட் இயக்குனரான சிவா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிவா மாஸ்டர் பேசியதாவது ” மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் அறிந்தவுடன் எனக்கு கால் செய்து சிம்பு பேசினார். மிகவும் வேதனையடைந்த உடனடியாகவே பெரிய தொகை ஒன்று செக் போட்டு குடும்பத்திடம் கொடுத்துவிட்டார்” என தெரிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, அவர் உதவி செய்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் பலரும் பாராட்டி பேசி வருகிறார்கள்.
சிம்புவை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் மோகன்ராஜ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி அளித்து உதவி செய்துள்ளார். மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.
செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம் என உருக்கமாக தனது இரங்கலை அவர் தெரிவித்திருந்த நிலையில் நிதியுதவி அளித்து உதவி செய்துள்ளார்.