Mella Thirandhathu Kadhavu :கண்கலங்க வைத்த காதல் கதை! மெல்லத் திறந்தது கதவு படம் உருவானது எப்படி?

இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1986-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான திரைப்படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. இந்த படம் அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைந்தது. அந்த அளவிற்கு காதல் கலந்த செண்டிமெண்ட் திரைப்படமாக இந்த படத்தை இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார்.
படத்தின் கதைப்படி, சுப்ரமணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ராதாவுடன் சிறிய வயதில் இருந்தே நண்பராக பழகி வந்துள்ளார். பிறகு, சுப்ரமணி நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய தனது கல்லூரி ஆய்வறிக்கைக்காக தனது குடும்பத்துடன் ஊருக்குப் செல்கிறார். சுப்ரமணி நண்பனாக பழகினாலும் துளசி மனதில் காதல் மலர்ந்தது.
பிறகு ஒரு கட்டத்தில் துளசியின் தந்தை மாரடைப்பால் இறந்துவிடுகிறார். சுப்ரமணியின் தந்தை துளசியுடன் சுப்ரமணிக்கு திருமணம் செய்து வைக்கும் போது, அவர் மறுக்கிறார். இதன் விளைவாக, துளசியின் தாய் வேதனையில் இறந்துவிடுகிறாள். இதன் பிறகு என்ன செய்வது என்றே தெரியாமல் துளசி தனது மாமா வீட்டிற்கு செல்கிறார். பின்னர், படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் வருகிறது, அதில் சுப்ரமணி தனது கல்லூரியில் படிக்கும் போது அமலாவாக நடித்துள்ள நூர்ஜஹானை காதலிக்கிறார்.
கல்லூரிக்கு நூர்ஜஹான் முக்காடு போட்டு வருவதால், சுப்ரமணி அவள் முகத்தை பார்க்கவில்லை. அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த ஒரு நாளில், நூர்ஜஹான் தற்செயலாக புதைமணலில் இறங்கி இறந்துவிடுகிறார். இதனை பார்த்த பார்த்த சுப்ரமணி வேதனையில் அழுவார். அதில் மோகன் நடிப்பை பார்த்தோம் என்றால் நமக்கே கண்களில் இருந்து கண்ணீர் வரும். அந்த அளவிற்கு நிஜமாகவே நடித்திருப்பார்.
நூர்ஜஹான் இறந்த அதே புதைமணலில் துளசி தன்னைத் தானே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறாள், சுப்ரமணி அவளை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஆனால் துளசியின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்ட சுப்ரமணி விரைந்து வந்து துளசியைக் காப்பாறுவர் இது தான் படத்தின் கதை. படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் கண்கலங்க வைக்கும் வகையில் இருக்கும் என்றே சொல்லலாம்.
அந்த காட்சிகளுக்கு எல்லாம் உயிர் கொடுத்தது என்றால் படத்தின் பின்னணி இசை ஒரு காரணம். படத்தின் இசை எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இருப்பினும், பாடல் ட்யூன்களை விஸ்வநாதன் இசையமைத்தார் மற்றும் இசைக்குழு ஏற்பாடுகளை இளையராஜா செய்திருந்தார்.
படத்தில் இடம்பெற்ற “வா வெண்ணிலா”, “தில் தில் தில் மனதில்”, “ஊரு சனம் தூங்கிடிச்சு”, உள்ளிட்ட பாடல்கள் எல்லாம் இன்று வரை பலருடைய பேவரைட் பாடல்களாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கும் சில பிரச்சனைகள் வந்தது. குறிப்பாக , மதுரையில் உள்ள சினிப்ரியா திரையரங்கில் படம் வெளியானபோது , ஒரு விநியோகஸ்தர் படத்தின் இரு பகுதிகளை மாற்றி படத்தை வெளியிட்டார்.
பிறகு இதனால் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால், இறுதியாக தமிழகம் முழுவதும் முதல் பாதியில் அமலா கதையையும், இரண்டாம் பாதியில் ராதா கதையையும் மாற்றி படம் வெளியிடபட்டது. படத்தை மக்கள் ஏற்பார்களா இல்லையா என படக்குழு குழப்பத்தில் இருந்தனர். ஒரு வழியாக படம் மக்களுக்கு பிடித்து போக படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இந்த படத்தை பார்த்து ரசித்தவர்கள் அனைவரும் படம் பார்த்துவிட்டு தங்களுக்கு தோணுவதை கூறி நினைவு கூர்ந்து வருகிறார்கள். அந்த சமயமே நல்ல பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து பிளாக் பஸ்டர் படமாக மாறியது. இனிமேல் இப்படி ஒரு திரைப்படம் வருமா என்பது சந்தேகம் தான்.