“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தனக்கு கொக்கைகன் பழக்கத்தை கற்றுத்தந்தாக நடிகர் ஸ்ரீகாந் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் கொக்கைன் விநியோக வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு கொக்கைன் வழங்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஸ்ரீகாந்திடம் சுமார் இரண்டு மணி நேர விசாரணை நடத்தப்பட்டு, அவரது ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. சோதனையில் போதைப்பொருள் பயன்பாடு உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பிரசாத், சென்னையில் பெரிய அளவிலான கொக்கைன் கடத்தல் வலையத்துடன் தொடர்புடையவர் என்றும், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு கொக்கைன் விநியோகித்ததாகவும் பிரதீப் குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“ஸ்ரீகாந்த் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு வாங்கி, ஒரு பப்-ல் பயன்படுத்தியதை நேரில் பார்த்தேன்,” என்று பிரதீப் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஸ்ரீகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு, ஆஜர் ஆன நிலையில் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை மூலம் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தனக்கு கொக்கைகன் பழக்கத்தை கற்றுத்தந்தாக பரபரப்பான விஷயத்தை தெரிவித்திருக்கிறார். அது என்னவென்றால், அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கைதாகும் முன், அவரிடம் 250 கிராம் கொக்கைன் பாக்கெட் வாங்கினேன். அதை வைத்து கடந்த சனிக்கிழமை (ஜூன் 21, 2025) இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள என் வீட்டில் கொக்கைன் பார்ட்டி நடத்தினேன்.
எனக்கு பிரசாத் மட்டுமே தெரியும். அவர் ‘தீங்கிரை’ படத்தில் என்னை நடிக்க வைத்து தயாரித்தார். படத்திற்காக தர வேண்டிய 10 லட்ச ரூபாய் பாக்கியைக் கேட்டபோது, பணத்திற்கு பதிலாக கொக்கைன் கொடுத்து பழக்கத்தை ஏற்படுத்தினார். நான் பணம் கேட்கும்போதெல்லாம், பிரசாத் கொக்கைன் வழங்கி, என் போதைப்பழக்கத்தை அதிகப்படுத்தினார். மூன்று முறை அவர் கொடுத்த பிறகு, நான்காவது முறை நானே கேட்கும் அளவுக்கு அடிமையானேன்” எனவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். “நான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்மை, ஆனால் தவறு செய்துவிட்டேன். எனது மகனை கவனித்துக்கொள்ள வேண்டும், குடும்பத்தில் பிரச்சினைகள் உள்ளன,” என்று நீதிமன்றத்தில் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த வழக்கு NDPS (நார்கோடிக்ஸ்) சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் வருவதால், அங்கு மட்டுமே ஜாமீன் கோர முடியும் எனக் கூறி, ஜூலை 7, 2025 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.