தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா இல்லையா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. ஏனென்றால், படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என பேசியிருந்தார். அவர் பேசிய அந்த நாளில் இருந்து கர்நாடகாவில் இருக்கும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர் நரசிம்மலு கமல் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தக்லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என தெரிவித்துள்ளார். மற்றோரு பக்கம் கமல்ஹாசன் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கினை விசாரிப்பதற்கு முன்பே கர்நாடக உயர்நீதிமன்றம் முதலில் கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் மனுவை விசாரிப்போம் என்று நீதிபதி கமல்ஹாசனை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியதுடன் சில கேள்விகளையும் முன் வைத்துள்ளது. அரசாங்கத்தின் சார்பாக வாதிட்ட பானுபிரகாஷ் தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு கமல்ஹாசன் ஆதாரம் வைத்திருக்கிறாரா?
தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது என்று சொல்வதற்கு நீங்கள் என மொழி ஆய்வாளரா? ” எனவும் கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதன்பிறகு “கமல்ஹாசன் இப்படி பேசி கர்நாடகாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். கருத்து சொல்வதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு ஆனால், உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் கண்டிப்பாக மன்னிப்பு கேட்கவேண்டும்.
நீங்கள் தான் பட வெளியிட்டில் சிக்கல் இருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள். எனவே, எதுவும் யோசிக்காமல் அப்படி பேசிவிட்டேன் என்று கூறி நீங்கள் கன்னடர்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அவர்களும் மன்னிப்பு தானே கேட்க சொல்கிறார்கள். மன்னிப்பு மட்டும் கேட்டால் இந்த பிரச்சினை முடிந்துவிடும்” எனவும் கேள்விக்கு கேட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும், கமல்ஹாசன் தொடர்ந்து இந்த வழக்குகான தீர்ப்பு என்பது இன்று 2.30 மணிக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.