இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!
இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் தான் கோப்பையை வெல்லும் என ராப் பாடகர் டிரேக் ரூ.6.4 கோடி பெட் கட்டியுள்ளார்.

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதிக்கொள்கிறது. இரண்டு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற காரணத்தால் எந்த அணி கோப்பையை வெல்லபோகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்திருக்கிறது.
இரண்டு அணிகளும் சிறப்பான பார்மில் இருப்பதன் காரணமாக இன்று நடைபெறவுள்ள இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு பெங்களூர் தான் கோப்பையை வெல்லும் என பிரபல கனடிய ராப் பாடகர் டிரேக் ரூ.6.4 கோடி (7.5 லட்சம் அமெரிக்க டாலர்) பந்தயம் கட்டியுள்ளார். இவர் கட்டியிருக்கும் இந்த பந்தயமானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஆர்சிபி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
எப்படி பெட் கட்டினார்?
பாடகர் டிரேக் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூர் தான் வெற்றிபெறும் என நம்பி ‘ஸ்டேக்’ (Stake) என்ற கிரிப்டோகரன்சி அடிப்படையிலான ஆன்லைன் பந்தய தளத்தில் ரூ.6.4 கோடி (7.5 லட்சம் அமெரிக்க டாலர்) பந்தயம் வைத்தார். இந்த தளம், விளையாட்டு போட்டிகளில் பணத்தை வைத்து பந்தயம் கட்ட அனுமதிக்கும் ஒரு ஆன்லைன் கேமிங் என்று கூட சொல்லலாம். பெட் கட்டிய இந்த விஷயத்தை டிரேக் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தினார். “ஈ சாலா கப் நம்தே” என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டு ஆர்சிபி-க்கு ஆதரவு தெரிவித்தார்.
வெற்றி பெற்றால் பணம் யாருக்கு, எப்படி கிடைக்கும்?
இந்த பந்தயத்தில் டிரேக் வெற்றிபெற்றுவிட்டார் என்றால் ‘ஸ்டேக்’ தளம் டிரேக்குக்கு ரூ.11.11 கோடியை செலுத்தும். இந்தப் பணம், அவர் வைத்த பந்தயத் தொகையும் (ரூ.6.4 கோடி) அதனுடன் கூடுதல் லாபமாக கிடைக்கும் தொகையும் (ரூ.4.71 கோடி) சேர்ந்தது. வெற்றிபெற்றவுடன் இந்தப் பணத்தை ‘ஸ்டேக்’ தளம், டிரேக்கின் கணக்கில் கிரிப்டோகரன்சி அல்லது வேறு முறையில் செலுத்தும், அது தளத்தின் விதிமுறைகளைப் பொறுத்து அமையும். ஆனால், ஆர்சிபி தோற்றால், டிரேக் வைத்த ரூ.6.4 கோடியை இழப்பார்.
ஏற்கனவே, டிரேக் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது கொல்கத்தா அணி வெற்றிபெறும் என 2 கோடி பந்தயம் வைத்தார். அதைபோலவே கொல்கத்தா அணி வெற்றியும்பெற்ற காரணத்தால் அவருக்கு 3 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அதற்கு அடுத்ததாக 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெல்லும் என டிரேக் ரூ.5.4 கோடி ($650,000) பந்தயம் வைத்தார். இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், டிரேக் ரூ.7.58 கோடி (£715,000) பெற்றார்.
தொடர்ச்சியாக இவர் பெட் கட்டிய அணி வெற்றிபெற்று இருப்பதன் காரணமாகவும் இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூர் வெற்றிபெறும் என அவர் கூறியதும் பெங்களூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.