”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதன் வெற்றி கொண்டாட்டம் இன்று (04.06.2025) பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஏராளமான ரசிகர்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிழந்தனர்.
இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ”ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பாடுகள் செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம்.
கட்டுப்படுத்த முடியாத கூட்டம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, விதான் சவுதாவிலிருந்து அணிவகுப்பு நடத்த விரும்பினோம், ஆனால் கூட்டம் இந்த அளவுக்கு வரும் என எதிர்பார்க்கவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒட்டுமொத்த கர்நாடகமும் உற்சாகமாக உள்ளது, இளம் தலைமுறை முதல் முதியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். 18 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஒரு பாறை போல் நின்றதற்காக விராட் கோலியை நான் வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.