கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் தமிழக அரசு வென்று காட்டும் – அமைச்சர் நாசர்!

Tamil Nadu Dairy Minister Samu Nasser has said that the Tamil Nadu government will defeat the third wave of Corona in Tamil Nadu.

தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் அதை தமிழக அரசு வென்று காட்டும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ஆவடியில் மகளிர் சுய உதவி குழுக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு குறித்த துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்பதாக அரசு ஆவடி அரசு மருத்துவமனையில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட நான்கு லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் கருவியை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆய்வு செய்து வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவின் 3ஆம் அலை வந்தாலும் தமிழக அரசு அதனை வென்று காட்டும் எனவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.