மாநிலங்களின் கையிருப்பில் 2.25 கோடி தடுப்பூசி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 53,24,44,960 கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 51,56,11,035 தடுப்பூசிகளை மாநிலங்கள் பயன்படுத்திவிட்டது. இதனால் தற்போது மாநிலங்கள் கையிருப்பில் 2,25,03,900 டோஸ் தடுப்பூசிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கூடுதலாக 72,40,250 தடுப்பூசிகள் அனுப்பியுள்ளது. தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு 51.90 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கடந்த ஜூன் 21 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திருத்தப்பட்ட கொள்கையை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.