பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேர உதவி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் செயல்படுத்தியுள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் நலனை வலுப்படுத்தும் விதமாக7827170170என்ற 24 மணி நேர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி சுபின் ராணி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு தேவையான உதவியை பெறுவதற்கு இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டச் சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் அவர்களால் தொடர்பு கொள்ள முடியும்.
மேலும் இதனை துவங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளதாவது, இந்த மின்னணு உதவி எண் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது அரசு ஆதரவளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார். பெருந்தொற்று காலத்தில் தேசிய மகளிர் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.