33% Reservation : தேர்தலுக்காக மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்படவில்லை.! அமித்ஷா விளக்கம்.! 

Union Minister Amit shah

தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.

மகளிருக்கு அளிக்கும் 33% இட ஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார். இந்த மசோதாவுக்கு “நாரி சக்தி வந்தன்” என பெயரிடப்பட்டுள்ளது.

மசோதா நிறைவேறிய பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2026ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு பல்வேறு கட்சியினர் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். ஏற்கனவே திமுக ஆதரவு அளித்த நிலையில் தற்போது மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவு நனவாகி உள்ளது. சுந்தந்திர போராட்டத்தில் மகளிரின் பங்கு மகத்தானது. இந்த மசோதாவை நாங்கள் (காங்கிரஸ்) ஆதரிக்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் , மக்களவை தொகுதி மறுவரையறை நிர்ணயம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இதற்கு தேவையில்லை, உடனடியாக இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த மசோதாவில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை அதனால் இந்த மசோதா முழுமை பெறாமல் உள்ளது என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சில கட்சிகள் அரசியலாக பார்க்கின்றனர். மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமைந்துள்ளது. இம்மசோதாவின் நீண்ட கால பயணம் பாஜக ஆட்சியில் முழுமை பெற போகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக இந்த மசோதாவை கொண்டுவரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்