கடந்த 7 ஆண்டுகளில் காட்டு யானை தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளனர்..!

The Right to Information Report states that 3,310 people have died due to wild elephant attacks in the last 7 years.

கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவில் காட்டு யானை தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளதாக வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஆர்டிஐ பிரச்சாரகர் கோவிந்தன் நம்பூதிரி அவர்கள் கடந்த 7 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காட்டு யானை தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை கேட்டுள்ளார். இது குறித்து வன, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 7 ஆண்டுகளில் காட்டு யானைகளின் தாக்குதலால் 3,310 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் ஒடிசாவில் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மேற்குவங்கம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும் காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் கடந்த 2014 – 2021 வரையிலான காலகட்டங்களில் அதிகபட்சமாக 589 பேர் காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசாமில் 479 பேரும், சத்தீஸ்கரில் 413 பேரும், ஜார்கண்டில் 480 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள கோவிந்தன், காட்டு யானைகளின் தாக்குதலால் மனித உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வன விலங்குகள் மற்றும் மனித உயிரிழப்பை குறைப்பதற்கு ஒரு சரியான வழிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும், இது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.