குஜராத்திலுள்ள அகமதாபாத் நகரின் புற நகரில் உள்ள அறையில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரின் புறநகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜூலை 20ஆம் தேதி இவர்களின் வீட்டிலிருந்த எல்பிஜி சிலிண்டரிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அண்டை வீட்டுக்காரர் கதவை தட்டியபோது, தொழிலாளி ஒருவர் எழுந்து மின் விளக்கை போட்டுள்ளார்.
எனவே ஒளி, வாயு செறிவு காரணமாக கசிந்து கொண்டிருந்த எல்பிஜி சிலிண்டர் வெடித்துள்ளது. அந்நேரத்தில் அங்கு 10 பேர் உறங்கி கொண்டிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். விபத்தில் காயமடைந்த 10 பெரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று வெள்ளிக்கிழமை 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் எல்பிஜி சிலிண்டர் வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேரின் குடும்பத்தினருக்கும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தலா 4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.