விதிமுறைகளை மீறிய அமேசான், பிளிப்கார்ட்.. ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம்!

central govt. written letter to RBI and ED to take action against Amazon and Flipkart for violating foreign direct investment rules.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999 (FEMA) ஆகிய விதிகளை மீறியதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT), மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலிடம் புகாரளித்தனர்.

அதில், இந்த புகாரினை அமலாக்கத் துறைக்கும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது. இவற்றில், பிளிப்கார்ட் – ஆதித்யா பிர்லா குடும்பம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் நடைபெற்றிருக்கும் விதிமுறை மீறல்கள், அமேசானின் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகள் மீறல், போன்ற புகார்களை முன்வைத்தார்கள்.

இதையடுத்து மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு,  அமலாக்கத் துறை மற்றும் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த சில காலங்களாகவே, பன்னாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருவது, குறிப்பிடத்தக்கது.