அசாம் சட்டசபை தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றியை தக்கவைத்து பாஜக வரலாற்று சாதனை!

The ruling BJP has set a historic record by winning the Assam Assembly elections for the second time in a row.

அசாம் சட்ட சபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்று ஆளும் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அசாம் சட்டசபை தேர்தல் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி இடதுசாரிகள் ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அதேபோல பாஜக கூட்டணியிலும் அசோம் ஞான பரிஷத், ஐக்கிய மக்கள் விடுதலை ஆகிய சில கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வந்தது. நேற்று இரவு 11 மணி நிலவரப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 76 தொகுதிகளை கைப்பற்றியதுடன், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48  தொகுதிகளை கைப்பற்றியது. 76 தொகுதிகளை கைப்பற்றி அசாமில் ஆளும் கட்சியான பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து அசாம் தேர்தலில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும் அசாமில் காங்கிரஸ் தான் அடுத்தடுத்த இரு முறைகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஆனால், காங்கிரஸை தவிர்த்து முதல்முறையாக பாஜக இரு முறை வெற்றி பெற்றுள்ளது வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.