புதுடில்லி: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத் கூறியுள்ளார். யோசனை: லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என பிரதமர் மோடி யோசனை கூறியிருந்தார். மேலும் அவர்,ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், எங்கள் உட்பட அனைவருக்கும் இழப்பு உண்டு. ஆனால், அரசியல்சாயம் பூசி இந்த யோசனையை பார்க்க கூடாது. இதனால், அதிக பண செலவு குறைக்கப்படும் எனக்கூறியிருந்தார். தேவை என்ன? இந்நிலையில், மத்திய பிரதேச தலைநகர் போபாலில் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அளித்த பேட்டி: ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த என்ன தேவை என எங்களிடம் மத்திய அரசு கேட்டது. இதற்கு நாங்கள் செப்டம்பர் 2018 ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக உள்ளோம். ஆனால், இது குறித்து முடிவு மற்றும் தேவையான அரசியல் சட்ட திருத்தங்களை செய்வது மத்திய அரசின் கையில் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்கீடு: ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம் புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
unknown node2018 செப்டம்பரில் 40 லட்சம் ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ.3,400 கோடி மற்றும் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.