இன்று கரையை கடக்கும் பிபார்ஜாய் புயல்...தயார் நிலையில் மீட்பு பணி வீரர்கள்.!

பிபார்ஜாய் புயல் அச்சுறுத்தல்:

BiparjoyCyclone

வடகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபார்ஜாய்’ புயல், இன்று மாலை 4 முதல் இரவு 8 மணிக்குள் கரையைக் கடக்கும். இந்நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் ‘பிபார்ஜாய்’ 13ம் தேதி வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில், நிலை கொண்டுள்ளது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று மாலை, மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிபார்ஜாய் புயல் அச்சுறுத்தல்:

பிபார்ஜாய் புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானை நோக்கி தனது திசையை மாற்றியுள்ளது. இதனால், குஜராத் மாநிலத்தில் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள், அங்கிருந்து இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயல் வலுவிழந்தாலும், குஜராத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரியவந்துள்ளது. மத்திய அரசு ஏற்கனவே நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி, மீட்புப் பணிக்காக ராணுவம் மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.