தெலுங்கானாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலநடுக்கம்! சிசிடிவி காட்சிகள் வெளியானது!

தெலுங்கானாவின் முலுகுவில் காலை 7:27 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

earthquake

தெலுங்கானா:தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் ஹைதராபாத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. காலை 7.27 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அந்த பகுதியில் வசிக்கும் மக்களை பதற வைத்தது.

காலை 7 மணியளவில் லக்செட்டிபேட், ஜெய்ப்பூர், மஞ்சேரியல், காசிபேட், தண்டேபள்ளி மற்றும் ஹாஜிபூர் மண்டலங்களில் நடுக்கம் ஏற்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறியதாக அவர்கள் தெரிவித்தனர்.

உயிர்சேதம் அல்லது பெரிய சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் நிலநடுக்க நிபுணர்கள் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சற்று விழிப்புடன் இருக்கவும், நெரிசலான இடங்களிளும் இடிந்து விழும் அளவுக்கு இடங்களில் இருக்கவேண்டாம்  எனவும் அறிவுறுத்துகிறார்கள்.

இந்த நிலநடுக்கம் குறித்து தெலுங்கானா வெதர்மேன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்  “கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தெலுங்கானாவில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையப்பகுதியாக முலுகுவில் நிலநடுக்கம் ஏற்பட்டது” என கூறியுள்ளார். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான சிசிடிவி வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node