அடிபணிந்த பேஸ் புக்..! "மத்திய அரசின் விதிகளை ஏற்கத் தயார்" என அறிவிப்பு...!

Facebook says it is ready to accept the Central government's new rules

மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி,அனைத்து சமூக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்து அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்தது.

அதன்படி,இந்தியாவில் உள்ள  ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும்,அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.

இதன் மூலம் புகார் அளித்தல்,ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல்,இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் போன்றவற்றை செய்ய அரசு நோக்கமாக கொண்டுள்ளது.

ஆனால்,மத்திய அரசின் இந்த புதிய விதிகளுக்கு எந்தவித பதிலையும் பேஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்ட்ராகிராம் பதிலளிக்காத நிலையில் இத்தகைய தளங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கைள் எடுக்கப்படலாம் என்றும்,அடுத்த 2 நாட்களில் தடை செய்யக்கூட வாய்ப்பிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கத் தயார் என்று பேஸ் புக் நிறுவனம் அடிபணிந்துள்ளது.

மேலும்,இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு,தேவையான மாற்றங்களை செய்ய உள்ளோம்.மேலும்,மக்கள் சுதந்திரமாகவும்,பாதுகாப்பாகவும் தங்கள் கருத்துகளை வெளியிட பேஸ்புக் உறுதியாக இருக்கும்”,என்று தெரிவித்தார்.

ஆனால்,தற்போது வரை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை புதிய விதிகளை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.