G20 Summit : டெல்லி ஜி20 மாநாட்டில் கும்பகோணம் பிரமாண்ட நடராஜர் சிலை.!

வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள் என தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஜி-20 மாநாட்டு நடைபெறும் இடத்தின் முகப்பில் பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலையானது தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலையில் இந்த பிரமாண்ட நடராஜர் சிலையானது தயாரிக்கப்பட்டுள்ளது. 28 உயரம் கொண்ட இந்த சிலையானது உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது.
மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரமும் 21 அடி அகலமும் கொண்ட இந்த சிலையானது 18 டன் எடை கொண்டது. செம்பு, பித்தளை , இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் என 8 உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர 7 டன் எடையில் சிலையை தாங்கும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி சென்றடைந்தது இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை.