ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அவர் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
மேலும் அவர் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கடந்த 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, பிரபல இயக்குனர்கள் ராகவேந்திர ராவ், தயாரிப்பாளர் அஷ்வினிதத் மற்றும் மற்றொரு தயாரிப்பாளர் நட்டிகுமார் ஆகியோர் ஏற்கனவே சந்திரபாபு கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாட் கட்சி தலைவர் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் மூத்த தலைவர்கள் சந்திரபாபு கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பலரும் கண்டனங்கள் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுடன் தொலைபேசியில் ரஜினி உரையாடியதாக கூறப்படுகிறது. லோகேஷிடம் பேசிய ரஜினிகாந்த் மக்கள் நலனுக்காக எப்போதும் போராடுபவர் சந்திரபாபு எனவும், பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது என ஆறுதல் தெரிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு அவரது நற்செயல்களும், தன்னலமற்ற பொது சேவையும் சிறையிலிருந்து அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும் எனவும் ரஜினி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
